ஒடிசாவில் பயங்கரம் ஓடும் காரில் பெண் பலாத்காரம்: ஆபத்தான நிலையில் ரோட்டில் வீச்சு

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஓடும் காரில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் ரோட்டில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் நேற்று இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரி அருகே உடை கிழிந்த நிலையில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு குர்தா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் குறித்து புவனேஸ்வரில் உள்ள கந்தகிரி பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தலைநகர் புவனேஸ்வரின் உள்ள கந்தகிரி பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தபோது அந்த இளம்பெண்ணுக்கு அவ்வழியே காரில் வந்த நபர் லிப்ட் கொடுத்து ஏற்றி சென்றுள்ளார்.

பின்னர் காரில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து சாலையில் தள்ளிவிட்டு சென்றது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக போலீஸ் எஸ்பி அஜய் பிரதாப் கூறியதாவது:   உடை கிழிந்த நிலையில் உடலில் படுகாயத்துடன் அந்த பெண்ணை மீட்டுள்ளோம். ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் குர்தா பகுதியில் உள்ள பிஎன் கல்லூரி அருகே வீசி சென்றுள்ளார். அவரை எத்தனை பேர் பலாத்காரம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்கம் தெளிந்த பின்னரே இது குறித்த முழுவிவரம் தெரியவரும். சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: