ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பெண் வட்டாட்சியர் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், அச்சத்தில் ஆந்திராவில் கயிறு கட்டி பின்னால் நின்று அலுவலர்கள் மனுக்களை வாங்குகின்றனர். மனு அளிக்க விரும்புவோர் பாதுகாப்பான தூரத்திலிருந்து அளிப்பதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் பெண் வட்டாட்சியர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் அனைவரும் மரண பயத்தில் பணியாற்றி வருகின்றனர். தெலுங்கானாவில் அப்துல்லபூர்மெட் பெண் தாசில்தார் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டதால் எரித்து கொல்லப்பட்ட நிகழ்வானது இரண்டு மாநிலங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மனு அளிக்கவரும் பொதுமக்களின் இயல்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.