பெங்களூரு: பெங்களூருவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் வருமான வரி செலுத்தாமலும், முறையான ஆவணங்கள் இன்றி தொழில் செய்வதாகவும், வருவாய்க்கு முறையான கணக்கு வைத்து கொள்ளாமல், பினாமி பேரில் சொத்து குவித்து வருவதாகவும் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை உறுதி செய்த பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகம், நிறுவனங்களில் சோதனை நடத்த திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை பெங்களூருவில் உள்ள வர்த்தூர், ஒயிட்பீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி உள்பட 11 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.