பவானி: பவானி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்திட விவசாயிகளின் வயல்களில் ஒட்டுமொத்த பரப்பில் மருந்து தெளிக்கும் பணியை, கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட உழவர் ஆர்வலர் குழுக்களின் மூலம் படைப்புழு தடுப்பு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பவானி வட்டாரத்தில் 75 ஹெக்டர் பரப்பில் மருந்து தெளிக்கும் பணிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் கதிரவன், பருவாச்சி கிராமத்தில் குமார் என்பவரது வயலில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளுக்கு பூச்சிகொல்லி மருந்துகளை வழங்கினார். மேலும், மருந்து தெளிப்பானை பார்வையிட்டு நல்ல முறையில் மருந்து தெளித்திட களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.