ஈரோடு: ஜிஎஸ்டியில் 450 கோடி மோசடியில் ஈடுபட்டதாக ஈரோடு அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினரும், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினரும் இணைந்து 5ம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் அரசின் பல கட்டுமான திட்டங்களை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரசு பணிகளுக்கு செய்யப்பட்ட கட்டுமான பணிகளுக்கு எவ்வித பணியையும் செய்யாமல், போலி ரசீதுகளை கொடுத்து, ஜிஎஸ்டியில் மோசடி செய்து வந்ததை ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள், கட்டிடங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், எந்த சேவையும் அளிக்காமல் போலி ரசீதுகளை தயாரித்து, 450 கோடிக்கு ஜிஎஸ்டியில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.