திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் அருகே கடினம்குளம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் மாணவியை கடத்தி சென்றது. இதற்கிடையே பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து கடினம்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். மறுநாள் காலை அந்த கும்பல் தும்பா பகுதியில் மாணவியை விட்டுவிட்டு தப்பி சென்றது.