சென்னை: வள்ளுவர் உருவம் உருவானது எப்படி என்பது குறித்து வரலாற்று ஆவணங்களில் கூறியிருப்பதாவது: குறள் நெறி தந்த ஞானன் திருவள்ளுவருக்கு முதலில் உருவம் தந்தவர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. இன்றும் அந்த உருவம்தான் திருவள்ளுவர் என்றால் இவர்தான் என்ற ஓர் உருவகத்திற்குள் நுழைய வைத்தது. சர்மா தனது 12வது வயதிலிருந்தே வள்ளுவருக்கு உருவம் கொடுக்க முயன்றார். ஆனால், முயற்சிகள் திருப்தியாக அமையவில்லை. இருந்தாலும் இதுதான் தனது லட்சியம் என்று தொடர்ந்து முயன்று வந்தார். பின் நாட்களில் பாவேந்தர் பாரதிதாசனின் நட்பு சர்மாவுக்கு கிடைக்கிறது. அவர் சில அமைப்புகளை அவரிடம் சொல்லி ‘உங்களால் முடியும் வரையுங்கள்’’ என்று உற்சாகம் ஊட்டினார். அதன்படிதான் சர்மா திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தார்.