ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியரை மர்ம நபர் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாப்பூர்மெட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்பவர் தாசில்தாராக பணி புரிந்து வருகிறார். இன்று வழக்கம் போல் அவரது அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த போது மதியம் 1.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் தாசில்தார் விஜயா ரெட்டியை சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் தாசில்தாரை சந்திப்பதற்கு அனுமதித்துள்ளார். சுமார் அரைமணி நேரமாக தாசில்தாருடன் பேசிய மர்மநபர் திடீரென வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே வந்த சில நொடிகளிலேயே விஜயா ரெட்டி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் அலறி அடித்துக்கொண்டு எறிந்த நிலையில் வெளியே வந்துள்ளார். தாசில்தார் தீக்காயங்களுடன் வெளியே வருவதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர். இதில் இருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் விஜயா ரெட்டி அலுவலக வளாகத்திற்குள் இருந்து வெளியே வர முயற்சி செய்த போது அந்த இடத்திலேயே பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார்.