துமகூரு: கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள மஞ்சுநாத்புரா கிராமத்தில் கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதில் அச்சம் அடைந்த கிராமத்தினர் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். கிராமத்தினரின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், கிராமத்தில் இரும்பு கூண்டு அமைத்து அதில் இறைச்சியை கட்டி வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை கூண்டில் இருந்த இறைச்சியை சாப்பிட சென்றது. அப்போது, கூண்டில் சிக்கிக் கொண்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சிறுத்தையை வனப்பகுதிக்கு எடுத்து செல்ல முயன்றனர்.