கும்பகோணம்: டெல்டாவில் தொடர் மழை காரணமாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மற்றும் தனியார் யானைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான யானைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மழை காலத்தில் யானைகளை பாதிக்கும் நோய்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள மங்களம் யானை மற்றும் தனியாருக்கு சொந்தமான 5 யானைகள் உள்ளிட்ட 6 யானைகளுக்கு தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை நேற்று நடந்தது. இதில் யானைகளுக்கு மழை காலத்தில் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் ஆந்தராக்ஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது.