முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சிவகங்கை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு நாளை(30-10-2019) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜை கொண்டாடப்படுகிறது.

30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறுவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் ஆகியோர் பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவர் நினைவிடம், அவர் வாழ்ந்த வீடு, புகைப்பட கண்காட்சி, பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள், முடிக்காணிக்கை செலுத்துமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம், அன்னதான பந்தல்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

Related Stories: