திருச்சி: திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் பணி கடந்த 72 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. குழந்தை விழுந்த போர்வெலில் இருந்து இரண்டு மீட்டர் தூரத்தில் துளையிடும் பணிகள் செய்யப்பட்டன. ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஆனதாலும், தொடர்ந்து துளையிட முடியாமலும், வேகமாக துளையிட முடியாமலும் இருந்தது. இந்நிலையில், தற்போது போர் போடும் இயந்திரத்தை கொண்டு ஏற்கனவே பாதியளவில் போடப்பட்ட துளையை மூன்று துளைகளாக பிரித்து அதை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளையிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அதில் மூன்று துளைகள் தற்போது 65அடி ஆழத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 36 மணிநேரம் கடந்து துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் குழந்தை, துளையில் சிக்கி தற்போது 72 மணி நேரம் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.