இஸ்லாமாபாத்: இந்திய படைகளுக்கு எதிராக ஆசாத் காஷ்மீர் மக்கள் புனிதப் போர் புரியக்கூடாது என்றும், அது பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிரானதாகும் எனவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்த பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான நேற்று காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பயங்கரவாதம் என்ற போர்வையை போர்த்தி, ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்களின் தற்போதைய நிலையை இந்திய அரசு மறைக்க முயல்கிறது என குற்றம்சாட்டினார்.