லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை எவ்வளவு காலம் தாமதப்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பிரக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 322 பேரும், எதிராக 306 பேரும் வாக்களித்தனர்.இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த புதிய ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டது. மேலும், பிரக்சிட்டுக்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீடிக்க கோரும் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிக்க கோரி ஐரோப்பிய கூட்டமைப்புக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கடிதம் எழுதியிருந்தார்.