லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் காட்டுத்தீ ஏற்பட்டது. மளமளவென தீ பரவி வருவதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்செல்சில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சான்டா கிளாரிடாவில், கடந்த புதனன்று பிற்பகல் காட்டு தீ பற்றியது. மளமளவென தீ பரவியதால் 5 ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள காடு தீப்பிடித்து எரிந்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக, தீ பரவியுள்ள இடங்களின் அருகில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 500 தீயணைப்பு துறை வீரர்கள் ஹெலிகாப்டர்கள், ஏர் டேங்கர் விமானங்கள் மூலமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.