சென்னை: செங்குன்றம் பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு நடத்தி ₹70 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் மங்கலம் (எ) ரவி (48). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செங்குன்றம் பைபாஸ் சாலை சர்ச் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும், அந்த பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு நடத்தி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு முறையாக சீட்டு பணம், தீபாவளி பண்டுக்கான பரிசு பொருட்களை ரவி வழங்கி வந்துள்ளார். இதனால் அவரிடம் ஏராளமான மக்கள் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். இதன் மூலம் அவர் மக்களிடம் ₹70 லட்சம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.