உசிலம்பட்டி அருகே பரிதாப சம்பவம் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல் 4 பெண்கள் உட்பட 6 பேர் பலி : 8 பேர் படுகாயம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஷேர் ஆட்டோ மீது, லாரி மோதிய விபத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாயினர். 8 பேர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமம். இங்கிருந்து 13 பயணிகளை ஏற்றிக்கொண்டு, உசிலம்பட்டிக்கு ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த வினோத் ஆட்டோவை ஓட்டி வந்தார். அப்போது உசிலம்பட்டியில் இருந்து  எழுமலை நோக்கி அதிவேகத்தில் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. உசிலம்பட்டி - எழுமலை ரோட்டில் ஊருணி வளைவு அருகே வந்தபோது, ஆட்டோ மீது லாரி மோதியது.  ஆட்டோவில் வந்த அசோக் (40), வாசியம்மாள் (40),  முத்துலட்சுமி (45), சத்யா (28), குருவம்மாள் (56), முருகன் (45) ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செல்வம் மனைவி நாகஜோதி (29), இவர்களது மகள்கள் தனுஜா (7), ஷர்மிளா (9) உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை உசிலம்பட்டி ஆர்டிஓ சவுந்தர்யா சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

இதனிடையே, விபத்து குறித்து எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வீரபாண்டியை (39) கைது செய்தனர். பலியான 6 பேர் உடல்களும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை பலகை இல்லை: விபத்து நடந்த உசிலம்பட்டி - எழுமலை சாலையில் கடந்த ஓராண்டாக இதேபோல், தொடர்ந்து ஷேர் ஆட்டோ விபத்துகள் நடந்து வருகிறது. இவ்விடத்தில் விபத்து எச்சரிக்கை பலகை இல்லை.

Related Stories: