புதுடெல்லி: அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில் சீக்கியர்களின் பழமையான குருத்துவாரா உள்ளது. சீக்கிய குவான குருநானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் கர்தார்பூருக்கு வழிபாட்டிற்காக செல்வது வழக்கம். இந்த ஆண்டு குருநானக்கின் 550-வது பிறந்த தினம் வரும் நவம்பர் 12-ல் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சீக்கிய யாத்ரீகர்கள் ஓராண்டுக்கு கர்தார்பூர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இதற்கு வசதியாக பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாரா முதல் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த சாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளது.