ஆவடி: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், கோயில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி, முத்தபுதுபேட்டை ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி சுகாதார மையம் மற்றும் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் தனியார் மற்றும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதற்கிடையில், திருமுல்லைவாயல், நேதாஜி நகரை சேர்ந்த பள்ளி மாணவி புவனேஸ்வரி (10) என்பவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இந்நிலையில் நேற்று மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் வைத்தியலிங்கம், சுகாதார அதிகாரி மோகன், சுகாதார ஆய்வாளர்கள் ஜாபர், ஜி.பிரகாஷ், ரவிச்சந்திரன், நாகராஜ், பிரகாஷ் ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.