வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது: கல்கி சாமியார் வீடியோ பதிவில் விளக்கம்

சென்னை: வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து கல்கி சாமியார் வீடியோவில் கருத்து பதிவிட்டுள்ளார். வருமான வரித்துறை விசாரணைக்கு ஆளான கல்கி சாமியார் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாக ஊடங்களில் செய்தி வெளியாகியிருந்தன. இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து கல்கி சாமியார் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. அங்கு சட்டவிரோதமாக சொத்து சேர்ந்து வைத்துள்ளதாக இவர்கள் மீது குற்றசாட்டு எழுந்ததையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கடத்த 5 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.

அதில், கணக்கில் வராத கட்டுக்கட்டாக 45 கோடி பணம் மற்றும் 20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் 90 கிலோ தங்கம் ,வைர நகைகள் என மொத்தம் 100 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. கல்கி ஆசிரமங்கள் சார்பில் இதுவரை மத்திய  அரசுக்கு ₹800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்கி சாமியாரின் மகன் மற்றும் அவரது மனைவி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கல்கி சாமியார் என்ற அழைக்கக்கூடிய விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பத்மாவதி இருவரும் தலைமறைவாகிவிட்டதாகவும், வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாகவும் குற்றசாட்டு எழுந்தது.

இது குறித்து சத்தியமேடு எம்எல்ஏ கூறியதாவது, கல்கி சாமியார் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. வெளிநாட்டில் பதுங்கியிருந்து கொண்டு ஆசிரமத்தை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்தார். இந்த நிலையில் கல்கி சாமியார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வருமான வரிசோதனை என்பது வழக்கமான ஒன்று. தாம் வெளிநாடு தப்பி ஓடியதாக வருமானவரித்துறை கூறவில்லை. ஊடகங்கள் தான் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆசிரமத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் சிலர் செயல்படுவதாக கல்கி சாமியார் புகார் தெவித்துள்ளார். தான் விரைவில் வெளியில் வந்து பக்தர்களை சந்திக்க உள்ளதாகவும், வருமானவரித்துறைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: