மாகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஆமீர் கான் உள்ளிட்ட பிரபலங்களும் வாக்களித்தார்

மாகாராஷ்டிரா: மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் குடும்பத்துடன் வந்து பதிவு செய்தார் .மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 5 புள்ளி 7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானாவில் 8 புள்ளி 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 3,237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பை பெருநகரில் மட்டும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மும்பையில் வாக்குப்பதிவு டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறையினர் மத்தியப் படையினர் என 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று 90 தொகுதிகளை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான ஆமீர் கான், மும்பையில் மேற்கு பந்தராவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். இதுவரை இல்லாத அளவாக, அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு சதவிகிதம் அமைந்திடும் வகையில் மகாராஷ்டிராவின் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும் என ஆமீர் கான் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, தனது மனைவியும், நடிகையுமான லாரா தத்தாவுடன் வந்து, மும்பையின் மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவரது மனைவி காஞ்சன் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில், புதிய வரவாக வந்திருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி, இம்முறை வாக்குப்பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் செளதாலா மற்றும் அவரது குடும்பத்தினர், டிராக்டரில் மூலம் வந்து சிர்சாவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் மாரத்வாடா மண்டலத்திற்குட்பட்ட லத்தூர்  மாவட்டத்தின் பல பகுதிகளில், கனமழை பதிவாகி வரும் நிலையில், வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழைக்கிடையே குடைபிடித்தபடி வரும் வாக்காளர்கள், தங்களது வாக்கினை பதிவு செய்து செல்கின்றனர்.

Related Stories: