மஞ்சூர்: மஞ்சூரில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதித்தது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் 3 தினங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கி ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் கொட்டியது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. குந்தாபாலம் ராமையா பிரிட்ஜ் அருகே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையின் மேற்புறத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரிய, பெரிய பாறைகள், கற்கள் உருண்டு ரோட்டில் விழுந்தது. குந்தாபாலம் பழைய தாலுகா அலுவலகம் அருகிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல், 20க்கு அதிகமான இடங்களில் நிலச்சரிவும் பாறைகள் உருண்டு விழுந்ததாலும் நீலகிரி, குன்னூர், கேத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து சென்று சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் மழையுடன் பலத்த இடி, மின்னல் ஏற்பட்டதில் குந்தா துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதுதவிர, கோத்தகிரி-சோலூர் மட்டம் செல்லும் சாலையில் குயின்சோலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டன. மழையால் கேத்தி, பாலாடா போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் ேசதம் அடைந்துள்ளன.