சேலம்: சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் சேவா ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார். தமிழகத்தில் சேலத்தில் இருந்து ஒரு ரயில் சேவை மற்றும் கோவையில் இருந்து 2 ரயில்கள் இயக்கி வைக்கப்படுகின்றன. கரூர், சேலம், பொள்ளாச்சி வழித்தடங்களில் இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து கரூருக்கு தினமும் ரயில் சேவை தேவை என்ற கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக சேலத்தில் இருந்து கரூருக்கு தற்காலிக ரயில் சேவை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது நிரந்தர சேவையாக மாற்றம் செய்ய மத்திய ரயில்வே துறை முடிவெடுத்திருந்தது. அதன்படி இன்று நிரந்தர ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி டெல்லி ரயில்வேத்துறை அலுவலகம், சேலம் சந்திப்பு ரயில் நிலையம், பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.