சென்னை: அதிமுக கட்சியின் 48ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 17ம்தேதி கட்சி கொடி ஏற்றி சிறப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. வரும் 17ம் தேதி அன்று 48வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளனர்.