திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் பெண் அதிகாரி ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே மாதந்தோறும் சம்பளம் பெற்றுவருவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அதிகாரி பொறுப்பில் 57 வயதான நிர்மலா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற உள்ள நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்தபடியே அரசின் சம்பளத்தை முழுவதுமாக பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. கால் விரலில் அறுவைச் சிகிச்சை என்று ஆரம்பத்தில் விடுப்பு எடுத்த நிர்மலா அதன்பின் பணிக்காக அலுவலகம் செல்வதை தவிர்த்து விட்டு மாதத்தின் கடைசி நாள் சென்று மொத்தமாக வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு ஊதியம் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.