ஸ்ரீநகர்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் எனபத்திரிகைகளில் காஷ்மீர் அரசு விளம்பரம் கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370வது சட்டப்பிரிவு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அன்றிலிருந்து கடந்த 68 நாட்களாக காஷ்மீரில் கடைகள் மூடப்பட்ட உள்ளன. தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து பலர் கடைகளை திறக்காமல் உள்ளனர். இந்நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, உள்ளூர் பத்திரிக்கைகளில்காஷ்மீர் மாநில அரசு முழு பக்க விளம்பரத்தை நேற்று கொடுத்தது. அதில் கூறியிருப்பதாவது:நாம் தீவிரவாதிகளுக்கு அடிபணிய போகிறோமா? கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர். பிரிவினைவாதிகளின் விஷம பிரசாரம், காஷ்மீர் மக்களை தீவிரவாதம், வன்முறை, அழிவு, ஏழ்மை என்ற பொறியில் தொடர்ந்து சிக்கவைத்துள்ளது. மக்களை ஏமாற்ற தீவிரவாத அச்சுறுத்தலை பிரிவினைவாதிகள் பயன்படுத்தினர்.