புதுடெல்லி: விமானம் ரத்து செய்யப்பட்டாலோ, தாமதம் ஆனாலோ, இது குறித்து பயணிகளுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானங்கள் தாமதமானால், விமான நிறுவனங்கள் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை என சமூக வலைதளங்களில் பயணிகள் புகார் செய்திருந்தனர். இதுகுறித்து, விமான நிறுவன அதிகாரிகளுடன் டிஜிசிஏ இயக்குநர் ஜெனரல் அருண் குமார் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது: விமானங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஆனாலோ, விமான நிலையத்தில் போர்டிங் கேட் மாற்றப்பட்டாலோ இதுகுறித்து பயணிகளுக்கு தகவல் அனுப்ப அனைத்து வகையான முயற்சிகளையும் விமான நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.