டால் டேமர்: சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் பயங்கர தாக்குதலை தொடங்கியிருக்கிறது. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது, அரசு படைகளுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரும் பலம் பெற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிடித்தது. ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின. இதனால் சிரியாவே சின்னாபின்னமானது. அங்கிருந்து படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு விரட்டி அடிக்கப்பட்டது. இதில் முக்கிய பங்கு வகித்தது குர்து படைகள்தான். அவர்கள், அமெரிக்காவின் ஆதரவுடன் தீவிரவாதிகளை விரட்டி, ஐஎஸ் பிடியில் இருந்த நகரங்களை மீட்டனர். ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டப்பட்டதால், சமீபகாலமாக அங்கு போர் ஓய்ந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். குர்து படைகளுக்கு தந்த ஆதரவை அவர் விலக்கிக் கொண்டார்.