அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசிய விவகாரம் பெண் வக்கீல் உட்பட 4 பேர் கைது : 5 ரவுடிகளுக்கு வலை

சென்னை: சென்னை அண்ணா சாலையில் காஸினோ திரையரங்கம் அருகே ேநற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்கு அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடிகள் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக ராயப்பேட்டை பாடர் தோட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் மனைவியும் வக்கீலுமான மலர் கொடி (50), அவரது மகன் அழகுராஜா (31), அழகுராஜா ஆதரவாளர்கள் திண்டிவனத்தை சேர்ந்த மணிகண்டன் (19) மற்றும் சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார் (30) ஆகியோர் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வெடிகுண்டு வீசியது, பொதுமக்களை அச்சுறுத்தியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், ரவுடி சிவகுமார்  ஆதரவாளர்கள் அரிவாளால் வெட்டியதால் வக்கீல் மலர்கொடி மற்றும் அவரது மகன் அழகுராஜா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் வெடிகுண்டு வீசிய வழக்கில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பெண் வக்கீல் மலர்கொடி, அவரது மகன் அழகுராஜா, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர். இதுதவிர எதிர்தரப்பை சேர்ந்த மயிலாப்பூர் பிரபல ரவுடியான சிவகுமார், ஷேக் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: