திண்டிவனம்: திண்டிவனத்தில் அமைச்சர் சண்முகம் வீட்டில் தங்கையின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் தெருவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு அமைந்துள்ளது. அமைச்சரின் பாதுகாப்பில் அவரது தங்கை வள்ளி-இளங்கோவன் ஆகியோர் மகன் லோகேஷ் குமார் (26) வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.நேற்று முழுவதும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, அமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு குளியலறை கதவுக்கு மேல் உள்ள ஸ்கிரீன் தொங்கவிடும் கம்பியில் துண்டைக்கட்டி லோகேஷ்குமார் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.