மும்பை: பி.எம்.சி. வங்கியில் நடந்துள்ள 4,355 கோடி ஊழல் தொடர்பாக அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். பி.எம்.சி. வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த வங்கியின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி 6 மாத காலத்துக்கு முடக்கியுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக மும்பை போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர்கள் நேற்று முன்தினம் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமசை கைது செய்தனர். நேற்று அவரை கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் எஸ்.ஜி.ஷேக் முன்பு ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து ஜாய் தாமசை அக்டோபர் 17ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.