டெல்லி - லக்னோ வழித்தடத்தில் தனியார் ரயில் ₹25 லட்சம் காப்பீடு தாமதமானால் இழப்பீடு

*பயணிகளுக்கு இலவச உணவு, டீ, காபி, பேப்பர் வசதி

லக்னோ : டெல்லி - லக்னோ வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ள தனியார் ரயிலில், பயணிகளுக்கு ₹ 25 லட்சம் காப்பீடும், இலவச டீ, காபி, டிபன், படிக்க பேப்பர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன . இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் முக்கிய அம்சமாக, நாட்டிலேயே முதல் தனியார் ரயிலான தேஜஸ் அதிவிரைவு ரயிலின் இயக்கம் டெல்லிக்கும், உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவுக்கும் இடையே நேற்று தொடங்கியது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் இந்த ரயிலில் மொத்தம் 738 பேர் பயணிக்கலாம். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட தேஜஸ் அதிவிரைவு ரயில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதாவது, டெல்லி - லக்னோ 554 கிலோமீட்டர் தொலைவை 6:15 மணி நேரத்திலேயே கடக்கும் விதத்தில் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே இதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். செவ்வாய்க்கிழமை தவிர்த்து, வாரத்தின் பிற நாட்களில் டெல்லி - லக்னோ, லக்னோ - டெல்லி மார்க்கங்களில் இயக்கப்படவுள்ளது.

இதில் பயணிக்கு ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் ரூபாய் வரை இலவச பயண காப்பீடு வழங்கப்படும். அத்துடன் ரயிலில் பயணம் செய்யும்போது, பயணிகளின் வீட்டில் திருட்டு நடந்தால், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடும் வழங்கப்படும். முக்கியமாக, ரயில் குறிப்பிட நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு தலா 100 ரூபாயும், இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தால் தலா 250 ரூபாயும் இழப்பீடாக தரப்படும்.

விமானங்களில் வழங்கப்படுவதற்கு இணையான உணவுகளை பயணிகளுக்கு வழங்கவும், ரயில் பயணித்தின்போது பயணிகள் இலவசமாக டீ, காபி பானங்களை இலவசமாக பெறும் வசதியும் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, சிறப்பு சேவக பணியாளர்களையும் தனியார் ரயில் நிர்வாகம் செய்துள்ளது. இந்த தேஜஸ் ரயிலில் லக்னோவில் இருந்து டெல்லி வரை பயணிக்க AC CHAIR CARன் கட்டணம் 1,125 ரூபாய் என்றும், executive chair carன் கட்டணம் 2,310 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: