அண்ணாநகர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத் (29). இவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதன்படி வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகி உள்ளார்.இந்நிலையில், கடந்த 1ம் தேதி விஷ்ணு பிரசாத் பூந்தமல்லியில் இருப்பது தெரிந்து, அவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்த 4 பேர் அங்கு சென்றனர். பின்னர், அவரை காரில் கடத்தி வந்து, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவரது தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘உங்களது மகனை கடத்தி விட்டோம். எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால் தான் அவரை விடுவிப்போம்,’’ என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, விஷ்ணு பிரசாத் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.