கடையம்:நெல்லை மாவட்டம் கடையம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி செந்தாமரை. கடந்த ஆக.11ம் தேதி இரவு இவர்கள் வீட்டில் இருந்தபோது முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபடவே, முதிய தம்பதியினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி கொள்ளையர்களை விரட்டி அடித்தனர். செந்தாமரை கையில் அரிவாள் வெட்டு விழுந்ததுடன் கழுத்தில் அணிந்திருந்த செயினையும் பறிகொடுத்தார்.இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து முதிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்தன. தமிழக அரசும், சுதந்திர தினத்தன்று அதி வீர தீரச்செயலுக்கான விருதை வழங்கி கவுரவித்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் அளித்த பேட்டி: முதிய தம்பதியை தாக்கி கொள்ளை நடந்த சம்பவத்தில், இந்த பகுதியில் உள்ள பல்வேறு கண்காணிப்பு ேகமராக்களில் உள்ள பதிவுகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றின் மூலம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.