திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே விளைநிலத்தில் 25 நாட்களுக்கு முன் ஒடிந்து விழுந்த மின்கம்பத்தினை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்யாததால் சப்ளை துண்டிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளிக்குடி அருகே உள்ளது தூம்பக்குளம் புதூர். சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது நெல், சோளம் பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். கிணற்று பாசனத்தை நம்பி விவசாயம் செய்யும் இந்த விவசாயிகளுக்கு தற்போது புதிய பிரச்னையாக மின்வாரியம் உருவெடுத்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது தோட்டத்தின் வழியாக செல்லும் மின்கம்பம் இரண்டு அடுத்தடுத்து சேதமடைந்த நிலையில் கடந்த 25 தினங்களுக்கு முன்பு ஒடிந்து வயலில் விழுந்துவிட்டது.