வாணியம்பாடி: வாணியம்பாடியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் நேற்று முன்தினம் அந்தமானில் மரணமடைந்தார். அவரது சடலத்தை வாணியம்பாடிக்கு கொண்டுவந்து 21 குண்டுகள் முழங்க அதிகாரிகள் அடக்கம் செய்தனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(44). இவர் அந்தமானில் தலைமை அதிகாரியாக(ஹெட் கான்ஸ்டபுள்) சிஆர்பிஎப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சக அதிகாரிகளுடன் கடலுக்கு குளிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் நேற்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதை செய்யப்பட்டது. 14 வயதான அவரது மகள் ஸ்ரீதன்யா, கண்ணீர் மல்க, தந்தையின் உடலுக்கு மரியாதை செய்தார். இந்நிகழ்வு அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.