நியூயார்: `‘பத்திரிகையாளர் கசோகியை கொல்ல நான் உத்தரவிடவில்லை’’ என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, `வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் கட்டுரையில், சவுதி அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். இதனால் அவர் சவுதி அரசின் கடும் கோபத்துக்கு ஆளானார். இதனிடையே, தன்னுடைய திருமண ஆவணங்களை பெறுவதற்காக கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கசோகி சென்றார். அதன் பின்னர் அவர் மாயமானார். சவுதி தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு குற்றம் சாட்டியது. ஆனால் கசோகி கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.