திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் தேவைக்காக இன்னும் 2 நாட்களில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையின் குடிநீர் ஆதாரமாக பார்க்கப்படக்கூடிய பூண்டி ஏரியின் ஒட்டுமொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியாகும். இந்த ஏரியானது கடந்த காலங்களில் வறண்டு காணப்பட்ட நிலையில் கடந்த 18ம் தேதி பெய்த கனமழை காரணமாக இந்த பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீரும் சேர்ந்து தற்போது இதன் நீரிருப்பு 553 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. அதாவது கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25ம் தேதி சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அது தமிழக எல்லை பகுதியான ஜீரோ பாய்ண்ட்க்கு வந்தடைந்து, அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி 150 கனஅடி என்ற விகிதத்தில் வந்து கொண்டிருந்த தண்ணீரானது தற்போது 557 என்ற கனஅடி விகிதத்தில் வந்து கொண்டிருக்கிறது.