நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

சென்னை: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் மு.க.ஸ்டாலினை நேற்றிரவு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் நேற்றிரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து  பெற்றார். மு.க.ஸ்டாலினும் அவர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: நிச்சயமாக, உறுதியாக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் பெற்ற வெற்றியை விட, பன்மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

நாங்குநேரி தொகுதியில் வருகிற 9, 10, 15,  16 ஆகிய தேதிகளில் நான் பிரசாரம் செய்ய உள்ளேன். மேலும், திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள்  காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள். வெற்றி என்ற இலக்குடன் எங்கள் கூட்டணி பாடுபடும். நாடாளுமன்ற தேர்தலில் என்ன வாக்குறுதி அளித்தோமோ, அதாவது அதிமுக ஆட்சியின் கமிஷன், கலெக்‌ஷன்,  கரப்ஷனை முன்னிலைப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நாளை காலை வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

Related Stories: