திருமலை: மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டை போக்குவதற்காக கர்னூல் சந்தையில் இருந்து 100 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஆந்திர மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கடும் மழையின் காரணமாக விவசாயிகள் பயிரிட்ட வெங்காயங்கள் மழைநீரில் சேதம் அடைந்ததால் விளைச்சலும் குறைந்தது. இதன் காரணமாக ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெங்காயம் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. தகவலறிந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் பதுக்கி வைத்திருந்த வெங்காயத்தை நேற்று பறிமுதல் செய்துள்ளனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.