புதுடெல்லி: நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர்களுக்கு மிக உயரிய விருதாக, “சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை விருது” வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகும். நாட்டின் ஒற்றுமைக்காக சிறந்த பங்காற்றியவர்களுக்கு புதிதாக “சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்ற உயரிய விருது வழங்கப்படும். இந்த விருது பெறுவோருக்கு பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படும். பண உதவியோ அல்லது ரொக்கப்பரிசோ வழங்கப்படாது. ஆண்டுதோறும் 3 பேருக்கு மிகாமல் இந்த விருது வழங்கப்படும். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி விருது அறிவிக்கப்படும். விருது ஜனாதிபதியால் வழங்கப்படும். ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவின்போது தேசிய ஒற்றுமைக்கான விருதும் வழங்கப்படும்.