லண்டன்: ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் நடவடிக்கை சட்ட விரோதமானது,’ என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான, பிரக்சிட் ஒப்பந்தத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின்றி நிறைவேற்றுவதற்காக இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற கூட்டத்தை 5 வாரங்கள் ரத்து செய்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். வரும் அக்டோபர் 31ம் தேதியுடன் பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிய உள்ள நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பிரிண்டா ஹெல்லை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கிய பிரதமரின் நடவடிக்கை சட்ட விரோதமானது. சபை தொடர்ந்து செயல்படலாம்’ என்று உத்தரவிட்டுள்ளது.