சட்டமன்ற இடைத்தேர்தல் விக்கிரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பிற்பகல் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன்,  எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத், ஊடக துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்பின் போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக  ஆலோசிக்கப்பட்டது.சந்திப்புக்கு பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:தேர்தல் ஆணையம், நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான தேதியை இன்று(நேற்று)  அறிவித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதி,  இந்த 3 தொகுதிகளுக்கு உரிய இடைத்தேர்தலும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.எனவே, இது குறித்துப் பேசிட அண்ணா அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியுடனும், கட்சியின் முன்னோடிகளுடனும் விவாதித்தோம், கலந்து பேசினோம்.

அந்த அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், புதுவை மாநிலத்தில் இருக்கும்  காமராஜ் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:திமுக சார்பில் போட்டியிடும் விக்கிரவாண்டி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?நாளை மறுநாள் வேட்பாளர்களுக்கான விருப்பமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம். விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு  அறிவிக்கப்பட இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவிருக்கிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எப்போது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாக இருக்கிறீர்கள்?தேர்தல் தேதியினை இன்றைக்குதான் அறிவித்திருக்கிறார்கள். எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று, கலந்து பேசி நாங்கள் அறிவித்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியில் இடம் பெற்றிருப்பவர்களோடும்  கலந்து பேசி, அதுகுறித்து முடிவு செய்யப்பட்டதும் பின்னால் அறிவிப்போம்.தேர்தல் தேதி தற்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வேட்பாளர்கள் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான நாட்கள் மிகவும் குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?விருப்பமனு தாக்கல் செய்வதற்கான நாட்கள் 23ம் தேதியிலிருந்து 29ம் தேதி வரையில் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதில் எந்தவிதச் சங்கடமும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள், எந்தெந்தத்  தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம்.

நாளை மறுநாள் திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை முறைப்படி வாங்கப் போகிறோம். அதேபோல், விரைவில் வேட்பாளர்களையும் அறிவிக்கவிருக்கிறோம். அந்தப் பணிகளை  வேகமாகவும், உடனடியாகவும் செய்வதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்.இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இவற்றுக்கெல்லாம் இந்தத் தேர்தல் வாயிலாக ஒரு பதில் விரைவில் கிடைக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

24ம் தேதி வேட்பாளர் நேர்காணல்

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பப்  படிவத்தை பூர்த்தி செய்து, வருகிற 23ம் தேதி(திங்கட்கிழமை) 10 மணி முதல் மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் நேர்காணல் 24ம்  தேதி(செவ்வாக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும்.வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் 25,000. விண்ணப்படிவத்தை 22ம் தேதி(இன்று) காலை 10 மணி முதல் படிவம் ஒன்றுக்கு 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: