சைதாப்பேட்டையில் துணிகரம் வழக்கறிஞர் வீட்டில் 150 பவுன், 2 லட்சம் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை : சிசிடிவி பதிவு மூலம் ஆசாமிக்கு வலை

சென்னை: வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, ₹2 லட்சத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றனர். சைதாப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (53). வழக்கறிஞரான இவர், தனது மனைவி ஜோதி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சத்தியமூர்த்தி கடந்த 16ம் தேதி இரவு தனது வீட்டின் பீரோவில் 150 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹2 லட்சத்தை வைத்துள்ளார். நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ₹2 லட்சம் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த சத்தியமூர்த்தி இதுபற்றி தனது மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, கடந்த 17ம் தேதி நான் வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்கு வந்த ஒருவர், சிறப்பு பூஜை செய்தால், வீட்டில் செல்வம் பெருகும், என்றார். இதற்கு நான் சம்மதம் தெரிவித்ததால், வீட்டில் யாகம் நடத்தினார்.

அப்போது, பீரோவில் இருக்கும் நகை, பணத்தை ஒரு பையில் போட்டு தரும்படி கூறினார். அதன்படி கொடுத்தேன். அவற்றுக்கு பூஜை செய்த பிறகு என்னிடம் பையை கொடுத்து, ‘‘இதை பீரோவில் வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து திறந்து பாருங்கள்,’’ எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி, அந்த பையை பீரோவில் வைத்தேன், என தெரிவித்துள்ளார். இதுபற்றி ேநற்று முன்தினம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: