ராகுல் காந்தி குறித்து அவதூறு கருத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் நேற்று அளித்த புகார் மனு: கடந்த 14 மற்றும் 15ம் தேதி தனியார் தொலைக்காட்சி சந்திரயான்-2 குறித்த கேள்விக்கு தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பற்றியும் உண்மைக்கு புறம்பான செய்திகளை எந்த ஒரு அடிப்படை ஆதாரமுமின்றி ‘இந்திய கலாச்சாரம் தெரியாமல் ராகுல் காந்தி அவர்களுக்கு தாய்மாமன் மடியில் உட்கார வைத்து இந்தியாவில் மொட்டை போடவில்லை. அதனால் அவர் ஒரு இந்தியர் இல்லை’ என்று மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மேலும், இந்திய நாட்டின் பிரதமரை குறிப்பிடும் பொழுது மோடி இந்தியாவின் ‘விந்து’ என்று கொச்சைப்படுத்தும் வகையில் பேசி, தான் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.

எனவே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறாக பேசுதல், ஆபாசமாக பேசுதல், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசுதல் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: