நெல்லை: நெல்லையில் மீண்டும் அபாய மருத்துவக்கழிவுகள் மற்றும் கெட்டுப்போன மருந்து மாத்திரைகள் பொறுப்பற்ற முறையில் குப்பையில் கொட்டப்பட்டு கிடந்தன. ஜவுளிக்கடை சோகேஷ் பொம்மைகளும் வீசப்பட்டு கிடக்கின்றன.
நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் அபாயகரமான மருத்துவ கழிவுகளை சாலையோரங்களிலும், குப்பைகளிலும் வீசி எறிவது தொடர்கதையாக உள்ளது. மருத்துவமனை கழிவுகளை அழிப்பதற்கு என நியதிகள் உள்ளன. அவற்றை முறையாக கையாண்டு அழிக்கும் அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோல் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்து மாத்திரைகளில் காலாவதியானவற்றை முறைப்படி தேதி போட்டு தனியாக கட்டி வைக்கவேண்டும். இவற்றை சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்கள் மூலம் முறைப்படி அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சாலை ஓரங்களில் அபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் கெட்டுப்போன மருந்து மாத்திரைகள் வீசப்படுவது அடிக்கடி நிகழும் சம்பவமாகி விட்டது. கேரளாவில் இருந்தும் அவ்வப்போது ரகசியமாக கழிவு குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. நெல்லை நயினார்குளம் - தச்சநல்லூர் சாலை ஒரு பகுதி வயலாகவும் மற்றொரு பகுதி குளமாகவும் இருப்பதால் இச்சாலையில் அதிக கட்டிடங்கள் இல்லை.