தமிழக பாஜ தலைவர் யார்?: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் யார் என்பதை விரைவில் கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழக பாஜ மீனவரணி சார்பில் சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் அருகில் இலவச ‘ஹெல்மெட்’ வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  விழாவுக்கு பாஜ மீனவரணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மீனவரணி மாநில செயலாளர்கள் கொட்டிவாக்கம் மோகன், செம்மலர் சேகர், கோவிலம்பாக்கம் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன  ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டை வழங்கினார்.

தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை சேவையோடும், பொதுநல நோக்குடனும் பாஜவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் சாலை விபத்துகளில் சிக்கி லட்சக்கணக்கானோர்  உயிரிழக்கின்றனர். இந்த அசம்பாவிதம் தடுக்கப்பட வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணிவது அவசியம். தமிழக பாஜ தலைவர் யார்? என்பதை கட்சி தலைமை விரைவில் முடிவு செய்து அறிவிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: