அமித்ஷா கருத்துக்கு எதிர்ப்பு இது இந்தியா; ‘இந்தி’யா அல்ல... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: இந்தி தொடர்பான தனது கருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய வலிமை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பாஜ அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி’ எனக் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்’ முயற்சியாகவே தெரிகிறது. அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே கேட்டவர் நம் தி.மு.க.வின் நிறுவனர் அண்ணா. அன்று தொடங்கி இன்றுவரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்த் தமிழைக் காத்து, பிற மாநில மொழிகளுக்கும் அரணாக விளங்கி வருகிறது தி.மு.கழகம்.

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். குடிமைப்பணி, ரயில்வே, அஞ்சல்துறை, வங்கிப்பணி என ஒவ்வொன்றாக இந்தியைத் திணிக்க முயற்சித்து, இப்போது இந்தியா என்கிற ஒருமைப்பாடு நிறைந்த நாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில், இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்கிற குரல் ஒலிக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க திமுக தயாராக இருக்கிறது; இது இந்தியா. ‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: