வேலூர்: 2008ம் ஆண்டு மருத்துவ கழிவுகளை கையாளுவதற்காக கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், தொற்றுக்கிருமிகள் பரவி உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குப்பைகளை கையாளுவதில் திடக்கழிவு மேலாண்மையை விரிவுப்படுத்த வேண்டியது கட்டாயம். ஆனால், குப்பைகளை அகற்றுவதில் பல ஆண்டுகளாக பெரும் சவால் நீடித்து வருகிறது. இதில் குறிப்பாக மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலைகளால் பல ஆயிரம் டன் மருத்துவக்கழிவுகள் குவிந்து விடுகிறது. இதை பத்திரமாக அப்புறப்படுத்தி மறுசுழற்சி செய்வது, அழிப்பது அவசியம். காரணம், தூக்கி வீசப்படும் மருத்துவக் கழிவுகளில் இருந்து தொற்றுக்கிருமிகள் காற்றில் பரவுகிறது. மனிதர்களுக்கு மருந்து செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியில் இருந்து 33 வகையான பாதிப்புகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் எய்ட்ஸ் உள்ளிட்ட 3 கொடிய நோய்களும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மருத்துவ கழிவுகள் கையாளுவதற்கான திட்டம் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அதன்படி, காலாவதியான மருந்துகளும், வேதிப்பொருட்களும், ஊதா நிற பெட்டியில் பயன்படுத்தப்பட்ட ஊசி, ஆபரேசனுக்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான பொருட்களும் கொட்டப்பட வேண்டும். இதில் உடல் உறுப்பு கழிவுகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி எரிக்கப்படும்.