மேலூர்: மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளில் அய்யனார், பட்டதரசி அம்மன் கோயில்களில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் பொய் சொல்லா மெய் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள கன்னிமுக விநாயகர், பாலமுருகன், பெரியகருப்பர், சின்னகருப்பர், வீரபத்திரர், முத்துகருப்பு, ஆஞ்சநேயர், பட்டதரசி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான யாகசால பூஜை கடந்த 11ந் தேதி துவங்கியது. விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாக வேள்விகள் தொடர்ந்து நடைபெற்றது.